Search This Blog

29 October 2015

அதியமானின் தோழி... !

     ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் யாழினியிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதித்ததில்லை. யாழினி என் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையையும் வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் இதை நான் உணரவில்லை. ரயில் ஸ்நேகம் போல இதை ஆபீஸ் ஸ்நேகம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லை.

நான் சுழலில் சிக்கிய சிறிய மரத்துண்டு போல அவளுடைய நட்பில் இழுத்துச் செல்லப்பட்டேன். ‘சார் யூனிவர்சிட்டி வரைக்கும் போயிட்டு வரலாமா?’ என்றாள். அவளுடைய வண்டியில் இருந்து மழைக்கோட்டை எடுத்துக்கொண்டு என் ஸ்கூட்டரிலேயே வந்தாள். 

அவளுடைய ஹெட் ஆஃப்த டிபார்ட்மெண்ட் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். வகுப்பு முடிந்து அவர் வரும்வரை நீண்ட படிக்கட்டுகளில் காத்திருந்தோம். மழை தூறிக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுக்குள் ஒருங்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எதிர் பார்க்காத தருணத்தில் ‘சொல்லுங்க சார்’ என்றாள்.

எதைப்பற்றியாவது சொல்லிக்கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று நான் அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். ‘ஏதாவது சொல்லுங்க சார்’ என்றாள், கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாக கவனித்தபடி.

‘நிகலாய் கோகலின் ‘’ஓவர் கோட்’’ மாதிரி நாம ஆளுக்கு ஒண்ணு மாட்டிக்கிட்டு இருக்கோம்’ என்றேன்.

‘அது யாரு உங்க சித்தப்பாவா?’ நான் நிகலாய் கோகல் எழுதின ‘மேல் கோட்டு’ சிறுகதை பற்றிச்சொன்னேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். பெண்கள் மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டும்தான் இப்படி மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். இங்கிதம் பார்க்காமல் நாசூக்காகச் சிரிக்கவேண்டும் என்ற முனைப்பின்றிச் சிரிக்கிறார்கள். சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு அப்புறம் என்று ஆர்வமாகக் கேட்டாள்.

மேல்கோட்டு பற்றி இல்லாமல் அங்கு பட்டாணி விற்பவனைப் பற்றிச் சொன்னாலும் யாழினி ஆர்வமாகக் கேட்பாள். இது யாழினியின் பாணி.
நேரமாகிக் கொண்டிருந்தது. அவளுடைய மேடம் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கே சென்றோம். பெண்பாற் புலவர்கள் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அவர்.

‘ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். அதியமான் நீடுவாழ நெல்லிக்கனி கொடுத்த ஔவை வேறு,ஞானப்பழத்தைப் பிழிந்த ஔவை வேறு. சங்க காலத்தில் காதலைப்பற்றிப் பாடிய இளம் ஔவைகளே அதிகம்’. வகுப்பு நடந்துகொண்டிருந்த அறையின் வராண்டாவில் நடைபோட்டவாறு இருந்தோம். ‘நிஜமாவா சார்?’ என்றாள் , ஆமா என்றேன்.

நான் என்ன கேட்டேன், நீங்க ஆமா’னு சொன்னீங்க? என்று சிரித்தாள்.

‘ஔவைதானே?’

ஸாரிசார்… நான் ஏதோ நச்சரிக்கிறதால சும்மாவாவது ‘ஆமா’ன்னு சொல்லிட்டீங்களோனு நினைச்சேன்.’ உங்களைப்போய் நச்சரிப்பதாய் நினைப்பேனா? நினைக்கமாட்டீங்க… ஆனா, நச்சரிக்கிறேன்னு எனக்கே தெரியும். யாழினி, அதியமான் நல்லா இருக்கணும்னு நெல்லிக்கனி கொடுத்த ஔவையை சின்னப்பெண்ணா கற்பனை செஞ்சு பாருங்களேன். நல்லாயிருக்கில்ல..?!… என்றேன். வியந்தாள்.

சங்க காலத்துல இவ்வளவு பெண்பாற் புலவர்கள் வேறு மொழிகள்ல இருந்தாங்ளானு தெரியலை. இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே ஔவையும் அதியமானும் இன்ட்டலக்சுவல் ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது. இன்னிக்கு நாம இங்கே வராம போயிருந்தா இந்த அருமையான விஷயம் பத்தி பேசாம போயிருப்போம் இல்லையா? நான் சொல்லுகிற விஷயத்தைக் கேட்டு அளவுக்கு அதிகமாகவே வியந்தாள் யாழினி.

அவள் என் மீது வைத்திருக்கிற பிடிவாதமான அன்பும் மரியாதையும் என்னைக் கவனத்துடன் பேசவைக்கும். ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டது மாதிரி அஞ்சவும் செய்கிறேன் சில நேரம். அவளுடைய வியப்புக்கு உகந்த விஷயங்களையே பேச வேண்டும் என்றும், அவள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உரியவனாக என்னைத் தகவமைக்க வேண்டும் என்றும் நான் ஓயாமல் போராடுகின்றேன்.

சட்டென்று மேகம் கவிழ்ந்து விடிகட்டிய சூரிய ஒளி வளாகம் முழுவதும் சூழ்ந்தது. போஸ்ட் கிராஜூவேட் முடித்து பட்டம் பெறுவதற்காக விண்ணப்பிப்பது குறித்து ஏதோ பேசிவிட்டு வந்தாள். அவளை ஹாஸ்டலில் கொண்டுபோய் விடும்போது நன்கு இருட்டி விட்டது.

திடீரென்று அவளுக்கு மாப்பிள்ளை தேர்வாகிவிடவே ஆபீஸை விட்டும் ஹாஸ்டலை விட்டும் அவள் விலகிக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு அந்த திடீர் தனிமை உலுக்கி எடுத்துவிட்டது. ஆறு மாதம் ஹாஸ்டல் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் என்கூடவே நிழல் மாதிரி வியாபித்திருந்தவள் ஏற்படுத்திய தாக்கம்.

இடையில் ஊரிலிருந்து அவள், ‘எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்’ என்று ஃபோன் செய்த போது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப்பட்டேன். அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது.

‘அதனால என்ன… நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ எனக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. யாழினி நீ ஏன் ஆம்பளையா பிறக்காம  போனே? என்ன இருந்தாலும் நாம முன்ன மாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?’ கொஞ்சமும் நாகரிகமில்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘முடியும் சார்… நாம எப்பவும் போல இருக்கலாம் சார்… கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்’.

யாழினி அவளுடைய திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கணவராகப் போகிற அதிர்ஷ்டசாலியும் உடன் வந்திருந்தார். என் மகளுக்கு கரடி பொம்மை, ஸ்வீட் என்று வாங்கி வந்தாள்.

அவர் என்னுடன் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார். ‘என்னுடைய ஃப்ரெண்ட் வீட்டுக்கு இவங்க வரணும்னும், இவங்களுடைய ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்கு நான் வரணும்னும் ஒரு ஒப்பந்தம். என்னோட ஒரே ஒரு ஃப்ரெண்ட் இவர்தான்னு உங்களைச் சொன்னாங்க. அதான் உங்களை இன்வைட் பண்ண வந்தேன்’ என்றார்.

‘ஹாஸ்டல் வெறுப்புகளுக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல் எனக்கு’ என்றாள் யாழினி குறுக்கிட்டு. என் கண்கள் கலங்கின. என் நல்ல தோழிக்கு நல்ல கணவர் கிடைக்கப்போகிறார் என்று பூரித்தேன். என் மனைவி டீ எடுத்துக்கொண்டு வந்தாள். எங்கள் வீட்டில் உபசரிப்பின் ஆரம்பம் டீதான். இரண்டு பேருமே டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் பதறிப்போய் அதைத் தடுக்கப் பார்த்தேன். யாழினி ‘இருக்கட்டும் சார்… நான் சில நேரங்களில் டீ குடிப்பேன். சொல்லுங்க சார்’ என்றாள்.

நான் எதை எங்கிருந்த தொடங்குவது என்று புரியாமல், ‘கார்ட்டூன் படங்களில் டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும். சி.டி. இருக்கு பார்க்கறீங்களா? என்றேன். போடுங்களேன்’ என்றார் அவர்.

பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. மனம்விட்டுச் சிரித்தாள். ‘பிரில்லியண்ட் காமெடி’ என வியந்து கொண்டே, யாழினி தன் ஹாண்ட் பேக்கில் இருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.

நெல்லிக்கனி ...!


4 comments: