Search This Blog

28 June 2016

தமிழ் வாலி ...!

                                                        

                                    
     இன்னும் ஒரு கனவுபோலத்தான் இருக்கிறது கவிஞர் வாலி இப்பூவுலகைவிட்டு விண்ணுலகு சென்றது. திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் சாதனை வரலாறு ஒரு பக்கத்தில் அடங்கிவிடக்கூடியதா..?     

   பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ தான் என்று நினைத்துகொள்வேன் . விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான், யார் அந்த பாடலை எழுதி  இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத் தான் முதல் அறிமுகம் . 

      அந்த பருவத்துக்கே உரிய குறுகுறுப்பு . அந்த பாடலை முழுசா கேட்டுடணும் என்ற ஆவலில் அந்தப்பாடலை ஆராய்ந்தால் பாடல் முழுக்கவே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது .ஓஹோ இவர் இப்படியான பாடல் எழுதுகிற கவிஞர் போல என்று தான் அன்றைக்கு நினைத்தேன் .பின்னாளில் தான் தெரியவந்தது . வாலி என்ற கவிஞர் தொட்டு எழுதாத சந்தங்களே இல்லை என்று . இன்றைக்கும் கிராமங்களில் "எம்ஜியார் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ..?" என்று மேற்கோள் காட்டுகிற பாடல்கள் முழுக்க வாலி எழுதியவயாகத் தான் இருக்கிறது. 

            "செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது. இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு

 "தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."

  டி.எம்.எஸ் குரல் உயர்த்தி "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும். 

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."

  என்று கவிஞர் வாலியை விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர் பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ,திருவான்மியூரில் குப்பம் கடற்கரை செல்லும் சாலையில் கொஞ்ச நாள் குடி இருந்தேன் . அப்போது இரவுகளில் குப்பம் கடற்கரையில் கொஞ்ச நேரம்அமர்ந்திருப்பது வழக்கம் . அங்கே மீனவர் குடியிருப்பு உண்டு .அதில் மீனவப்பெரியவர் ஒருவர் தினமும் குடித்துவிட்டு வேத பாடம் போல இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பார் . உடைந்த குரலில் அந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அவருக்கு ரசிகனாகவே ஆகிவிட்டேன் . மீனவ நண்பன் என்று எம்.ஜி.யாரை இன்றும்சென்னையில் சொல்லுவார்கள் , எனக்கென்னவோ வாலியை அப்படி சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது .

"மறுபடியும்" என்று ஒரு திரைப்படம் . அதில் "எல்லோரும் சொல்லும் பாட்டு.."
என்று SPB பாடிய பாடல் . எழுதியது கவிஞர் வாலி . அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு அத்துப்படி . நீண்ட நாட்களாக என் கைபேசியில் அழைப்பு பாடலாக அது தான் இருந்தது .

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே 

ஷேக்ஸ்பியர் சொன்ன பெருந்தத்துவம் இந்த நாளே வரிகளில் அடக்கி சொல்லிவிட்டார் வாலி .எனக்கு ஆச்சர்யம் ."பக்கம் வந்த மாமா,இதுக்கு பேரம் பேசலாமா?பாக்குப்பாய போட்டு, நீயும் பயாஸ்கோப்பு காட்டு" என்றெல்லாம் எழுதிய வாலியால் எப்படி இப்படியும் எழுத முடிகிறது ? என்று அதிசயமாக இருக்கும் , கொஞ்சம்வருத்தமாகவும் இருக்கும் . ஆனால் பின் வாலியே "நான் காசுக்கு பாட்டெழுதவந்தவன்" என்று சுயவாக்குமூலம் கொடுத்த பின்னால் , என் மனம் அவர்நிலைப்பாட்டில் அதிக மூக்கை நுழைத்தெல்லாம் ஆராய்ச்சி செய்ய விரும்பியதில்லை . அந்த பாடலில் எனக்கு எல்லா வரிகளும் பிடிக்கும் என்றாலும் , சிலப்பதிகாரத்தின் சாரத்தை இரண்டு வரிகளில் எழுதி இருப்பார் வாலி .அது தான் மிகுந்த வியப்பு  எனக்கு

"கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று"

அட ..என்று கேட்பவரை ரசிக்க வைக்கும் அவ்வரிகள் ...
வாலியின் சினிமா பாடல்களை எடுத்து சிலாகிக்க வேண்டுமென்றால் , ஒரு புத்தகம் தான் எழுதவேண்டும் . ஊர் உலகம் அறிந்த விஷயம் இது .எல்லா சினிமாப் பாடல்களையும் விட , வாலி எழுதிய கவிதை ஒன்று . எனக்கு மட்டுமில்லை தமிழர் யாருக்கும் அது பிடிக்கும் . தமிழ் சமுதாயம்முழுமைக்கும் அவ்வரிகள் மிக உன்னதமானது ..என்ன கவிதை என்று யோசிக்குறீர்களா..? தமிழர் தலைவர் பிரபாகரனை பற்றி வாலி எழுதிய வரிகள் 

"முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?
நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? "
மேலும் அதே கவிதையில்
"நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்...!

எனக்கு படிக்க படிக்க சிலிர்க்கும். இவ்வரிகளை படிக்கும்போதெல்லாம் . எவ்வளவு பொருத்தமான வரிகள். கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாக்களில் கவியரங்கம் இசைப்பது, எதன் பொருட்டும்அவர்களை விமர்சிக்க வாய் திறக்காதது போன்ற விடயங்கள் எனக்கு பல சமயங்களில் பெரியவர் மீது வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது . நண்பர்களிடத்தில் மனம் வருந்தி பேசி இருக்கிறேன் . ஆனால் என்னவோ "கவிஞர்" என்ற வாலியை என்னால் விட்டுக் கொடுக்கவே முடியவில்லை . கலைஞரோடு இருந்தாலும் , பார்வதி தாயார் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரத்தில் அரசை சாடியும் கவிதை எழுதிய விதத்தில் வாலி தன் நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார் என்பதை புரிந்துக் கொண்டேன் .

     சகோதரி செங்கொடி உயிரை ஈகித்து வீரமரணம் அடைந்த பொழுது , வாலி அய்யா எழுதிய கவிதை,

"கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்டு-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?
உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!" 
என்று மகளை இழந்த தந்தையின் பரிதவிப்பை இந்த கவிதையில்பார்க்க முடியும் .

  வாலி கோபக்காரர். தனக்கு சீதக்காதியாய் திகழ்ந்த எம்ஜிஆரிடமே கோபத்தைக் காட்டியவர். ஆனால் கவிஞர்களின் கோபம் குழந்தைகளின் கோபத்துக்கு சமம் என்பதை உணராதவரா அந்த ராமச்சந்திர மூர்த்தி? அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல், வாலியை உடன் வைத்து வேண்டியன செய்து ராஜகவியாக வைத்திருந்தார். எம்ஜிஆரின் அரசவைக் கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, வாலியும்தான்!

                                      


          கவியரசரைப் பற்றி வாலி அளவுக்கு உயர்வாக யாரும் எழுதி – பேசிக் கேட்டிருக்க முடியாது. “கண்ணதாசனுக்கு நான் தாசன்.. அவருக்கு நான் கூடப் பிறக்காத தம்பியாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தன் இளவல் என்று சொன்ன மாபெரும் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன அறிவுரைகளை இன்னைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன். சொந்தப் படம் எடுக்காதேன்னார்.. நான் அதைச் செய்யவே இல்ல,” என்றார்.

        ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான். கண்ணதாசனின் நடையை நீங்கள் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, “அதுல என்னய்யா தப்பு… என்னை தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள்… தகரத்தோடு இல்லையே.. நான் கேட்டது, படிச்சதெல்லாம் கண்ணதாசனைத்தானே. அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கண்ணதாசனைப் போலவே நான் எழுதுகிறேன் என்ற ஒப்பீடு எனக்கு சிறுமை அல்ல… பெருமை,” என்றார்...!
                              



     கவிஞர் வாலிக்கு ரஜினி எப்போதுமே ஸ்பெஷல். அன்றைக்கு அவர் எம்ஜிஆருக்கு எழுதியதையெல்லாம் நவீன தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு எழுதினார். ‘எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவர் அவர்தான். நண்பர் ரஜினியும் அப்படித்தான். அவருடனும் யாரையும் ஒப்பிட முடியாது. அந்த மனுஷன் மனசு வச்சா… இந்த தமிழ்நாடே வேற மாதிரி இருக்கும்,’ என்பார்.  கருணாநிதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படிச் சொன்னவர் வாலி.     

    எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழ்சினிமாவின் ஜாம்பவான்களையே தனது பாடல்களால் மயக்கிய வாலிக்கு அதன்பின் வந்தவர்களை வசீகரிப்பதில் பெரிய சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. காதல், தாலாட்டு, வீரம், தத்துவம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், விரக்தி, பக்தி என வாலி தொடாத ஏரியாவே இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அப்படியே விஜய், அஜீத் என தொடர்ந்து இப்போதுள்ள சிவகார்த்திகேயன் வரை எல்லா தலைமுறை நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார் வாலி. மெல்லிசை மன்னர்களுடன் பணிபுரிந்த இவரால் அவர்களுக்குப்பின் முப்பது வருடம் கழித்து வந்த இசைப்புயலுடனும், அவருக்குப்பின் இருபது வருடம் கழித்து இன்றுவந்த அனிருத்துடனும் இணைந்து பணியாற்ற முடிந்தது என்றால் அதற்குக் காரணம் வயதாக வயதாக, இளமையாகிக்கொண்டே வந்த அவரது மனதுதான்.

     தமிழின் துணைகொண்டு தனக்கே உரித்தான மிடுக்கோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் பெரியவர் வாலி .அகவை எண்பதை கடந்த பொழுதும் , இவரின் வார்த்தைகளில் மட்டும் முதுமை தெரிந்ததே இல்லை .

"தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே...
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்...."

   என்று காதல் செய்யும் யாரும் கேட்ட மாத்திரத்தில் கிறங்கி மயங்கும் பாடல் இது . இதை எழுதும் பொழுது வாலி எண்பதை கடந்துவிட்டார் . தமிழ் திரையுலகம் கண்ட கவிஞர்களில் இந்த வரம் கண்ணதாசனை விடவும் வாலிக்கே மிக அதிகமாய் கிடைத்திருந்தது என்பது என் கருத்து .வாலியை யாரோ ஒருவர் வம்புக்கு இழுத்த பொழுது மேடையிலேயே வாலி சொன்னாராம் "டேய் நான் மாமிசம் திங்குற பாப்பான் , என்கிட்டே வச்சிக்காத " என்று . போலியாக வாழாமல் நான் இப்படித்தான் என்று ஊருக்கு உரைத்த விதத்தில்உறுதியான நெஞ்சம் தான் கவிஞர் வாலிக்கும் .

     1958ல் ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில் பாடல் எழுதத் தொடங்கிய வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்கிய ‘காவியத் தலைவன்’ படத்துக்கும் பாடல் எழுதிக்கொடுத்து விட்டுத்தான் சென்றுள்ளார். இவரது பாடல்களைப் பாடாத பாடகர்களோ, இவரது பாடல்களுக்கு இசையமைக்காத இசையமைப்பாளர்களோ, இவரது பாடல்களைப் பாடி நடிக்காத நடிகர்களோ தமிழ்சினிமாவில் யார் யார் இருக்கிறார்கள் என எண்ணத் தொடங்கினால் ஒற்றை இலக்கத்தில் முடிந்துவிடும் அது.

    ‘மன்னன்’ படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஐயப்பன் கோவிலில் அந்தப் பாடல் வரிகள் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது வேறெந்த கவிஞருக்கும் கிடைக்காத மணிமகுடம். வாலி 10000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதாக தெரிகிறது. 50 ஆண்டுகளில் 10000 பாடல்கள் என்றால் ஓராண்டுக்கு சராசரியாக 200 பாடல்கள்.அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு பாடல். அப்பப்பா! வாலியின் வேகம் வாயு வேகம்தான் .

எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
  
  என்று எழுதிய வாலி , மண்ணை விட்டு கிளம்பி விட்டார் . விதியின் வாய்க்குள்எல்லோரும் ஒரு நாள் விழத்தான் போகிறோம் . கவிஞர் வாலி காலத்தால் மறக்க முடியாத பாடல்களை எழுதி அழியாப் புகழ் பெற்று பூரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு இறுதி யாத்திரை கிளம்பி இருக்கிறார் . "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்கந்தனே உனை மறவேன் .." என்று எழுதிய வாலியையும் அவர் திரையிசை பாடல்களையும் 
தமிழ் நெஞ்சங்கள் என்றைக்கும் மறக்க முடியாது .

    அவர் பெரிதும் விரும்பி சேவித்த ரங்கராஜனை நானும் வேண்டிக் கொள்கிறேன் . அந்த வெண்தாடி கவிஞன் , ரங்கனின் திருவடியில் ஆழ்ந்த இளைப்பாறுதல் பெறட்டும் . "என் வெற்றி என்பது என் வலிமையில் வந்தது இல்லை , தமிழின் வலிமையால் வந்தது" என்று சொன்ன வாலி , தமிழுள்ள வரையிலும் புகழ் தழைத்திருப்பார் .
 ஆண்டாண்டு காலம்
தொன்மையுடைத்த
தெள்ளு தமிழ்
உம் விரல்களின் வழியே
துள்ளு தமிழானது
வாலி ..!
உங்கள்
தமிழ்த் திரையிசைப் பாடல்கள்
எங்கள் சந்ததிக்கும்  ஆகுமோர்  
தூளி !!

4 comments:

  1. வரிகளிக்கிடையே
    தத்துவம்
    காதல்
    அம்மா
    புகழ்
    பாசம்
    சோகம்
    கற்பனை
    வார்த்தெடுத்தாள்
    தமிழ் அன்னை
    நீ வாழி
    என் வித்தக கவி வாலி

    ReplyDelete
  2. Yenna bro ilayaraja nu oru vaarthai koodaaa illaaa....ilayaraja-vaali evergreen combo....

    ReplyDelete
    Replies
    1. அதை தனியாகவே ஒரு பதிவு போடலாம்.. நேரம் கூடவில்லை...!

      Delete
  3. கவிஞர் வாலி அவர்களின் நினைவு நாள் இன்று.

    6 வருடங்களுக்கு முன்பு அவர் புகழுடம்பு எய்த போது அவரது பாணியிலேயே நான் அவருக்கு எழுதிய இரங்கல் கவிதை.
    (கவிதையா என்னன்னு நீங்கதான் சொல்லணும் ���� )

    மீண்டும் மீள்பதிவு செய்கிறேன்.

    -----------------------------------------------------------------------

    "வாலிபக் கவிஞராம் வாலி!
    வானம் உள்ளவரை
    இரவாப் புகழால் வாழி!

    உயிரின் இறுதி மூச்சு வரை படைத்துக் கொண்டு இருந்தாய் கவிதை!
    இன்று என் போன்றரிடம் விட்டு சென்று இருக்கிறாய் பா(பாட்டு) விதை!

    மெட்டுக்குப் பாட்டா! பாட்டுக்கு மெட்டா! எனக்கு தெரியாது.
    ஆனால், உன் பாட்டுக்கு மட்டும் என்றும் குவியும் துட்டு!

    உன் விரல் வழி வந்த பாடலை,
    தன் குரல் வழி பரப்பிய
    குயில்கள் இங்கு ஏராளம்!
    அனைவரும் ரசித்தனர்
    ரொம்பவே தாராளம்!

    விழுந்து, விழுந்து எழுதினாய் சந்தம்!
    அதனால் பெற்று இருக்கிறாய் ஏராளமான சொந்தம்!
    அவை அத்தனையும் பந்தம்!

    தத்துவப் பாட்டு, காதல் பாட்டு, சோகப் பாட்டு, அறிமுகப் பாட்டு, நக்கல் பாட்டு!
    நீ எழுதினால் அத்தனையும் அதிர் வேட்டு,

    உன் தாடையில் இருப்பது வெண் தாடி அன்று!
    இப்போதுதான் தெரிகிறது அது பண் தாடி என்று!

    தலைமுறையைப் பொருத்து அமைவது TREND!
    தாத்தா முதல் பேரன் வரை எல்லாரும் உன் FRIEND!

    நீ பிறந்ததால் பெருமை கொள்வது திருவரங்கம் (ஸ்ரீ ரங்கம்)
    உன் பாட்டால் மகிழ்ந்தது திரை அரங்கம்!

    எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா!
    அனைவருக்கும் இனி உன்னைப் போல் பாட்டு எழுவது யார்யா?

    இலையும் சொந்தம் உனக்கு!
    சூரியனிடமும் பந்தம் இருக்கு!
    எப்படியையா உந்தன் கணக்கு?
    சொல்லாமல் சென்று விட்டாயே எமக்கு!

    வாலிபக் கவிஞராம் வாலி நீ!
    உன் பாடல்களே எங்கள் மன ரணத்திற்கு Valini

    தமிழே உன்னிடம் சரணம்!
    உனது தமிழுக்கு இல்லை மரணம்!

    நீ! மீண்டும் பிறந்து வர வேண்டும்!
    பல கவிகளை சுரந்து தர வேண்டும்!

    அன்புள்ள
    அஜி,
    சென்னை.

    ReplyDelete