எதிர்பார்க்காத நேரத்தில் வருவதில் மழை விளையாட்டுப் பிள்ளை..... சிலமுறை கனவுகளோடு வரும், பலமுறை கனவுகளைக் கலைத்தபடி வரும். அன்றும் அப்படித்தான் வந்தது.... பேருந்துக்காக காத்திருக்கும் எனக்கு அது எப்படி இருந்தது தெரியுமா ...?
மழை எப்பொழுதுமே கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் குளிர்ச்சியையும் சேர்த்து கொள்கிறது. அலுவலக வேலையை முடித்து கொண்டு இரவு பத்து தாண்டிய மணித்துளியில்தான் கோவைக்கான கிளம்பலுடன் பேருந்து நிலையம் நோக்கி வந்தேன், ஏனோ அத்தனை கூட்டம்.. மெல்ல ஆரம்பித்த மழை, மெள்ள தொடங்கியது. சில்லென்ற மழை சிலிர்க்க ஆரம்பித்திருந்தது. முகம் துடைத்தபடி பேருந்துகள் வருவதும் மக்களை அள்ளிக்கொண்டு செல்வதும், அந்த காட்சி பொம்மைப் பேருந்துகளில் தொற்றிக்கொண்டிருக்கும் எறும்புகள் போல இருந்தது. தலையில் தண்ணீர் படாத மாதிரி ஒரு சுவரோரம் ஒளிந்து நின்று கொண்டிருந்தேன்..
இந்த மழை, கனவை கலைக்க வந்த மழை மாதிரி தெரியவில்லை. கனவைக் கண்டும் காணாமல் போகும் ஒரு பயண சாலையில் குலுங்கும் மஞ்சள் நிற பூக்கள் போல வந்து கொண்டிருந்தது.